ஆட்சி கவிழப் போகுதுன்னா நினைக்கறீங்க.. ம்ஹூம்.. இதுதான் நடக்கப் போகிறது!

தினகரன் தரப்பு கை வசம் 25 எம்.எல்.ஏக்களுடன் மறுபடியும் கெத்தாக எடப்பாடி தரப்பின் சட்டையைப் பிடித்து உலுக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் சட்டையைப் பிடிப்பதோடு இவர்கள் நிறுத்திக் கொள்வார்கள். அதற்கு மேல் இறங்கிப் போக மாட்டார்கள், போகவும் முடியாது என்பதே நிதர்சனம். தினகரன் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருந்தபோது எடப்பாடி தரப்புக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அவர்கள் பாட்டுக்கு சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். குறிப்பாக கொங்கு லாபிதான் கோலோச்சிக் கொண்டிருந்தது. இதனால் தினகரன் ஆதரவாளர்கள் ஓரம் கட்டப்பட்டு டென்ஷனில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தினகரன் ஜாமீனில் விடுதலையாகி சென்னை வந்து சேர்ந்ததும் பிரச்சினை ஆரம்பித்து விட்டது. இரு தரப்பும் பகிரங்கமாகவே மோதிக் கொள்ளத் தொடங்கி விட்டனர். அதிகாரப்பூர்வமாக 3 பிரிவாக அதிமுக பிளந்து நிற்கிறது.

29 பேர் இருக்காங்க
 தினகரன் தரப்பில் 29 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக அந்த அணியின் கலைராஜன் கூறியுள்ளார். எடப்பாடி தரப்புக்கு இது நிச்சயம் பெரும் நெருக்கடியாகும். இந்த எண்ணிக்கை உண்மையாக இருந்தால் எடப்பாடி அரசு பதவியிலேயே நீடிக்க முடியாது. கூடாது.

உடனே விலக வேண்டும் 
பெரும்பான்மை பலத்தை இழந்து நிற்கிறது எடப்பாடி அரசு. சட்டப்படியும், தார்மீக ரீதியிலும் அவர் பதவியில் நீடிக்கக் கூடாது. உடனே விலக வேண்டும் அல்லது சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர வேண்டும். ஆனால் தமிழகத்தில்தான் தார்மீகத்தின் மீது தார் ஊற்றிப் பூசி விட்டனரே!

தினகரன் தரப்பு என்ன செய்யும் 
ஒன்றும் செய்யாது. கையில் எம்.எல்.ஏக்கள் இருப்பதை காட்டி விட்டார்கள் அல்லவா. அடுதது பேரத்தில் குதிப்பார்கள். இந்தப் பதவி கொடு, அந்தப் பதவி கொடு. நான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்ற ரீதியில் பேரம் நடைபெறும். இதற்கு எடப்பாடி தரப்பு இறங்கி வந்தே தீர வேண்டும்.

கவிழ்க்க மாட்டார்கள் 
ஒரு வேளை எடப்பாடி தரப்பு இறங்கி வராவிட்டாலும் கூட ஆட்சியைக் கவிழ்க்க மாட்டார்கள். காரணம் அதனால் எந்தப் பிரயோஜனமும் அவர்களுக்கு இல்லை. ஏன் அதிமுகவைச் சேர்ந்த யாருமே அதை விரும்பவும் மாட்டார்கள். காரணம், ஆட்சி கவிழ்ந்தால் அடுத்து ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியாது என்பது அனைவருக்குமே தெரியும். ஸோ, அதை நிச்சயம் செய்ய மாட்டார்கள்.

காசு பணம் துட்டு மணி மணி! 
மொத்தத்தில் இந்த மிரட்டலும், உருட்டலும், ஆள் சேர்ப்பும் எடப்பாடி தரப்பை வழிக்குக் கொண்டு வருவதற்காக மட்டுமே. மாறாக ஆட்சிக் கவிழ்ப்புக்கெல்லாம் சான்ஸே இல்லை என்பதை அனைவருமே அறிவர். எடப்பாடி தரப்பும் கொஞ்சம் நீக்கு போக்காக நடந்து கொண்டு சமாளிக்கவே முயற்சிக்கும். ஸோ, எந்த பிரச்சினையும் இல்லாமல் இரு தரப்பும் கை குலுக்கிக் கொண்டு தங்களது "பிசினஸை"த் தொடரவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.

source: oneindia tamil
Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

No comments :